search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை கடற்படை"

    • இலங்கை கடற்படையினர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 மீனவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும், விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைப்பிடிப்பு சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறித்தான் வருகிறது. மீனவர்களின் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வாகும் என்ற ஒற்றை வாசகம் இந்த பாராளுமன்ற தேர்தலில் ஓங்கி ஒலித்து வருகிறது.

    இதற்கிடையே எல்லை தாண்டி வந்ததாக குறிப்பாக ராமேசுவரம் மீனவர்கள் மாதத்தில் 20-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம், உண்ணாவிரதம் இருந்தபோதிலும் நிரந்தர தீர்வு எட்டப்படாமலேயே உள்ளது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 338 விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதிசீட்டு பெற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 5 குட்டி ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    ஆனாலும் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் மெக்கானிக் (வயது 34) என்பவரை தண்ணீர் பைப்பை கொண்டு இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு இடது கை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதே போல் ராமேசுவரம் மீனவர் தங்கம் (55) என்பவரையும் கம்பு மற்றும் கம்பியால் தாக்கியதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே படகில் இருந்த மீனவர்கள் பாதியில் இன்று அதிகாலை கரை திரும்பினர். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் இலங்கை கடற்படையினர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 மீனவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்படையினர் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 7 மீனவர்களை சிறைபிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
    • ஒரே நாளில் 32 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அவர்களை சிறைபிடிப்பதோடு, பல லட்சம் மதிப்பிலான மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இலங்கை சிறையில் இருந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீனவர்கள் விடுதலையானபோதும், படகுகளை அரசுடமையாக்குவதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

    கடந்த 16-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆரோக்கிய கந்தன், இஸ்ரோல் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளுடன் அதில் இருந்த 21 மீனவர்களை 17-ந்தேதி அதிகாலையில் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். காங்கேசன்துறை முகாம் அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் ஒரே வாரத்தில் 2-வது சம்பவமாக இன்று 32 மீனவர்களை 5 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்றை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்தநிலையில், அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்படையினர் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 7 மீனவர்களை சிறைபிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

    இதே போன்று காங்கேசம் கடற்படையினர் 3 விசைப் படகுகளுடன் 25 மீனவர்களை சிறைபிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். படகில் இருந்த மீனவர்கள் விக்டோரியன் என்பவரது விசைப்படகுகளில் இருந்த அந்தோணி ஆரோன், ஜேசு ராஜா, திருப்பால் மற்றும் அருளானந்தம் என்பவரது படகில் இருந்த ஜெகன், அந்தோணி காட்ஷன், ராஜசேகர், ராஜா முகம்மது, ரஞ்சித், ராமு, காயன், மோகன், மனோகரன், சேகரன், முருகன் உள்ளிட்ட 32 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில், 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததுடன் மீனவர்கள் 32 பேர் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை நீதியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 32 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை கைது செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் வி.பி.ஜேசுராஜா கூறியதாவது:-

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு கவனம் செலுத்தி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்கிறது.
    • நெடுந்தீவு அருகே 21 தமிழக மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தினமும் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடிப்பதும், அவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை பறிமுதல் செய்து இலங்கை அரசின் நாட்டுடமை ஆக்குவதும் அதிகரித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள் மாற்று தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த 14-ம் தேதி கட லுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசைப்படகுடன் 15 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இன்று ராமேசுவரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் பெரும்பாலான படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் இலங்கை ராணுவத்திற்குச் சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அச்சத்துடன் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அவசரம் அவசரமாக சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் இலங்கை கடற்படையினர் ஆரோக்கிய சுகந்தன் மற்றும் இஸ்ரோல் என்பவரது 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர்.

    அந்தப் படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தர பாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, சந்திவேல், இஸ்ரோல் படகில் இருந்த மீனவர்கள் அந்தோணி லோபாஸ் (34), அடிமை (44), திவாகர் (34), யோஸ்வா (35), அஜித்குமார், பிரவீன் (26), ரெஜீஸ் (35), செந்தில் (44), இருளாண்டி ஆகிய 21 மீனவர்களை கைதுசெய்தனர்.

    இதனைதொடர்ந்து, இன்று காலையில் 2 படகுகள் மற்றும் 21 மீனவர்களை காங்கேசம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பகுதிக்குள் வந்த மீன்பிடித்ததாக கூறி 2 படகுகள் மற்றும் படகில் பிடிக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யக் கூறி, யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இந்திய அரசின் பதிவு எண் இல்லை. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என இலங்கை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதை தடுக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை.
    • அடிக்கடி கைது செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியா- இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

     

    • நமது மீனவர்கள் பல தலைமுறைகளாக நமது நாட்டிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர்
    • சமீபகாலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும். கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (11-3-2004) கடிதம் எழுதியுள்ளார்

    அக்கடிதத்தில், "இலங்கைக் கடற்படையினர் 10.03 2024 அன்று இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளதோடு, 22 மீனவர்களை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டு இது நமது நாட்டு மீனவர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம் என்பதால் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும்.

    நமது மீனவர்கள் பல தலைமுறைகளாக நமது நாட்டிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர் என்றும் மீன்பிடித் தொழில்தான் அவர்களது வாழ்வாதாரமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். சமீபகாலமாக அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதும். கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் அதிகரித்து வருவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார் இத்தகைய கைது நடவடிக்கைகள் பாதிக்கப்படும் மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.

    எனவே உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு. மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாகவும். தீர்க்கமாகவும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது.
    • நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    அறந்தாங்கி:

    தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது இஅலங்கை கடற்படையினர் கைது செய்தது.

    எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக பத்மநாதன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமானவை உள்பட 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    சிறைபிடிக்கப்பட்டவர்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேரும் அடங்குவர்.

    மீனவர்கள் உடனடியாக விடுவிக்கவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சமீபத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர்.

    தமிழக அரசும் இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியுள்ள நிலையில், மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.
    • மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.

    மீனவர் ஜான்சன் ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.


    சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.

    மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா புறக்கணிப்பு என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இதை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து படகு மூலம் 2 டன் பீடி இலைகள் கடத்தி சென்ற 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    கடத்தலில் ஈடுபட்டதாக தூத்துக்குடி இனிகோ நகர், சிலுவைபட்டி மற்றும் லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது19), அபிஷ்டன் (19), மரிய அந்தோணி (20), டிஜோ(24), காட்வே (19) ஆகிய 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் கூத்தன்குழி கடற்கரை வழியாக படகு மூலம் பீடி இலைகளை கடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
    • 19 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான ஒன்று ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த பகுதியை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பயந்து கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகினர்.

    இருந்தபோதிலும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். மேலும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர்.

    ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனிய சாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அபகரித்துக் கொண்டனர்.

    பின்னர் அவர்கள் காங் கேசம் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இலங்கை நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 19 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம் மீனவர்களுடன் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஓட்டல் தொழில் முதல் விவசாய பணிகள் வரை வெளி மாநிலத்தவர் கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் தற்போது தற்போது மீன்பிடி தொழிலிலும் கால்தடம் பதித்துள்ளனர். ஒடிசாவை சேர்ந்தவர்கள் ராமேசுவரம் பகுதியில் தங்கி நமது மீனவர்களுடன் கடலுக்கு சென்று வருகிறார்கள்.

    சமீப காலமாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும், இதனால் இலங்கை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 3-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 23 மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்த நிலையில், இன்று மீண்டும் 19 பேர் கைதாகி இருப்பது சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள யாழ்ப் பாணம் சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலையானது குறிப்பிடத்தக்கது

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது இலங்கைக் கடற்படை.

    இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    • ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பிரதமர் மோடியின் ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக அவர் ராமேசுவரம் வருகை தந்தார். 20-ந்தேதி பிற்பகலில் வந்த அவர் அன்று இரவு ராமேசுவரத்திலேயே தங்கினார். மறுநாள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு டெல்லி திரும்பினார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி, ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. பிரதமரின் பயணம் நிறைவடைந்ததையடுத்து நேற்று முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அதன்படி ராமேசுவரத்தில் இருந்து நேற்று 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் பலர் கடலில் வீசியிருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து அவசரம், அவசரமாக புறப்பட்டனர்.

    ஆனாலும் விரைந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக் கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து, இரண்டு விசைப்படகுகளுடன் 6 மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. படகுடன் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முன்னதாக பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் தவிக்கும் 40 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மேலும் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் மாவட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரும் நேற்று முன் தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கவர்னரிடம் கூறும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கடுமையாக தாக்கினர். பல மணி நேரம் பூட்ஸ் காலால் மிதித்து நடுக்கடலில் தள்ளி 8 மணி நேரம் தத்தளிக்க வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறினார்கள்.

    இது பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கவர்னர் தமிழிசை உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலை ரூ.1½ கோடியாகும்.

    அனைவரும் கடன் வாங்கி தான் படகுகளை வைத்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாக கூறி அடிக்கடி மீனவர்களை கைது செய்வதை தடுக்க இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    கைது செய்தவர்களை சித்ரவதை செய்தது குறித்து கவர்னரிடம் புகார் கூறியுள்ளோம். சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 

    ×